பிரபல திரைப்படம் ஒன்றில் மாணவர் ஒருவர் தன் விருப்பத்திற்கேட்ப படித்தது போலவும், அதனால் அவர் உயர்ந்தது போலவும் காண்பிக்கப்பட்டார், மேலோட்டமாக நன்று. அனால் படத்தில் எங்கும் அவர் படிப்பது போல் காட்டப்படாததும், முடிவில் அனைவரை விடவும் பணக்காரராக அவர் ஆக்கப்பட்டதும் - படிக்காதது: அது யாராலும் விரும்பப்படாததாலும், பணக்காரராக ஆக்கப்பட்டது: அது அனைவராலும் விரும்பப்படுவதாலும் என்பது அடிப்படையில் தவறானது ஆகும். முடிவில் அந்த மாணவர் அதிகமாக பணம் சேர்க்காத, ஓட்டு வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண மனிதனாக, தனது அறிவை அனைவருக்கும் கற்பிக்கும் ஆசிரியனாக காட்ட முடியாதது நம் சமூகத்தின் தோல்வியே.
இனி தலைப்புக்கு வருவோம்
கல்வி என்பது ஒருவன் தன் மனதை (Concentration) எந்தவொரு பொருளின் மீதும், தேவைப்படும் பொழுது செலுத்துவதும் (ஒருங்கிணைப்பதும்), தேவைப்படும் பொழுது அகற்றுவதுமேயாகும். வெறும் தகவல்களை சேகரிப்பது கல்வி அன்று.
- விவேகானந்தர்
உதாரணமாக, தன் மனதை ஆளத்தெரிந்தவனுக்கு, ஐ பி எல் சீசனிலும் செமஸ்டர் எழுத முடியும், அழகான பெண் மறைக்கும் போதும் பேருந்தில் திருக்குறள் படிக்க முடியும். இது கல்வி மட்டும் அல்ல, உண்மையில் இதுதான் வாழ்கை. அந்த காலத்தில் மின் விளக்கு இல்லாதபோதும் மேதைகள் உருவானதும், இன்று A/C class room-ல் மாணவர்கள் Depression-க்கு உள்ளாவதும் இதனால்தான். நமது கல்வி இதை கற்பிக்காத போதுதான், உயர்ந்த மதிப்பெண் எடுத்த ஒருவனால் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாமல் போகிறது. இங்கு முன்னேற்றம் என்பது பணம் அல்ல. இன்று நாம் அதிகமாக பணம் சம்பாதிக்கிறோம் அனால் அதற்கு விலையாக ஆரோக்யத்தை, நிம்மதியை, வாழ்வின் அர்த்தத்தை கொடுத்து வருகிறோம்.
நம்மை சுற்றிலும் பல அதிசயங்களும், உண்மைகளும் உலகில் பரவிக்கிடக்கின்றது, அனால் அதை பார்பதற்கு நாம் நம் பார்வையை சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.
- விவேகானந்தர்அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் விவேகானந்தர் அவை இவ்வுலகில் ஏற்கனவே இருந்ததாகவும், அதை கூர்ந்து நோக்கிய கவனம் அறிவியலர்களிடம் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்த கவனமும், பார்வையும் தான் நியூட்டனை ஆப்பிள் மூலமும், கலிலியோவை நட்சத்திரம் மூலமும், ஆர்ய பட்டாவை கணிதம் மூலமும் தலை சிறக்க வைத்தது. இன்று நாம் நோய்களை பெருக்கி, நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு நோபல் கொடுத்து, அறிவை போற்றுகின்றோம்.
விவேகானந்தரின் வாழ்வியல் கோட்பாடுகள், இந்த வலைப்பூ போல் சுவாரசியம் இல்லாமல் இருப்பதாலோ என்னவோ, வாழ்வியலை உலகுக்கு சிறப்பாக போதித்த அவரை, இந்த வேகமான வாழ்கையில் மறந்து விட்டோம்.
இன்று நாம் அனைவரும் வேகமாகவும், தீர்க்கமாகவும் போய்கொண்டிருக்கிறோம், அனால் போகும் பாதை சரியானதுதானா?
புவன் - யுவனுக்காக
முனுசாமி
(அடுத்து: இரட்டையர்கள்\04-06-2012)
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)